சொத்து தகராறு: தம்பியை சுட்டுக்கொன்ற திமுக நிர்வாகி
சொத்துத்தகராறில் சொந்த சகோதரனையே திமுக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பில்லா ஜெகன். இவர், சகோதரர்களுடன் இணைந்து லாரி ஷெட் தொழில் செய்து வருகிறார். சின்னக்கடை தெருவில் வசித்து வரும் இவருக்கும், இவரின் சகோதரர்களுக்கு இடையே சொத்துப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது தமது தம்பி சிம்மனை எச்சரிக்கும் வகையில் பில்லா ஜெகன் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த சிம்மனை மீட்டு, உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பில்லா ஜெகனை தேடி வருகின்றனர்.