விசிக - திமுக தொகுதிப் பங்கீடு.. ஸ்டாலின் திருமா இடையே ஒப்பந்தம் கையெழுத்து.!
2026 சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக 23 கட்சிகளுடனும், எதிர்கட்சியான அதிமுக 14 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அமமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. மற்ற சிறிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு விரைவில் முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை 1 மாத காலத்திற்கு மேலாக நீடித்த நிலையில், சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்றைய தினம் 6 தொகுதிகளைக் கேட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, 5 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்த சூழலில் தான், விசிக இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியிருக்கிறது.
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டது. அதேசமயம், திமுக தரப்பில் இருந்து 8 தொகுதிகள் ஒதுக்கவே வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. முன்னதாக, புதுச்சேரியில் 3 தொகுதிகளைக் கேட்டு வந்த நிலையில், 1 மட்டுமே அங்கு ஒதுக்கப்பட்ட நிலையில் விசிக புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான், இன்றைய பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், பேச்சு வார்த்தை உடன்பாட்டை எட்டியதையடுத்து 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் சேர்த்து 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த சூழலில், இம்முறை 2 தொகுதிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மநீம மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
