ஸ்தம்பித்தது அண்ணா சாலை: போலீசார்- திமுக இடையே கடும் தள்ளுமுள்ளு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக அதன் தோழமை கட்சியோடு சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சென்னை உள்பட பல இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடைய சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை எதிரே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை நோக்கி வாலாஜபாத் சாலை வழியாக பேரணியாக சென்றனர். கருப்புக் கொடி ஏந்தி ஏராளமானோர் பேரணியாக செல்வதால் அவர்களை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பேரணியாக செல்பவர்களை தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்தனர். ஆனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் தடுப்புகளை தள்ளிவிட்டு தங்களது பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ச்சியாக போராட்டமும் நடைபெற்று வருகிறது.