தமிழகம் கடந்துவந்த பாதையில் முக்கிய மைல்கல்களை நிறுவிய ஆளுமை: கருணாநிதி நினைவலைகள்

தமிழகம் கடந்துவந்த பாதையில் முக்கிய மைல்கல்களை நிறுவிய ஆளுமை: கருணாநிதி நினைவலைகள்
தமிழகம் கடந்துவந்த பாதையில் முக்கிய மைல்கல்களை நிறுவிய ஆளுமை: கருணாநிதி நினைவலைகள்
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஓரிருவர் சரித்திரமாகிறார்கள். ஒரு சிலர், சரித்திரத்தை உருவாக்குகிறார்கள். பலர் சரித்திரத்தில் இடம்பெறுகிறார்கள் என்று கூறிய மு.கருணாநிதி, தான் எழுதிய வரிகளுக்கு தானே பொருத்தமானவர். தமிழகம் கடந்து வந்த பாதையில் முக்கிய மைல்கல்களை நட்டுவைத்த சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்.
அரசியல் சாணக்கியர், எழுத்தாளர், கவிஞர், நாடக திரைப்பட வசனகர்த்தா, நுட்பமான அரசியல்வாதி என்ற அத்தனைபிம்பங்களுக்கும் பொருந்தக்கூடிய தலைவராக இருந்து மறைந்தவர்.
ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், அதிகாரத்தின் மையமாக, உந்து சக்தியாக அளப்பரிய ஆற்றலுடன் இயங்கிக்கொண்டே இருந்த தலைவர்களில் முக்கியமானவர் மு.கருணாநிதி. அதனால்தான் அவரை, எண்ணெய் ஊற்றாமலே எரியும் எழுத்துச் சூரியன் என்று தனது புத்தகத்தில் வர்ணித்திருக்கிறார் கவிஞர் சுரதா.
நேர்வகிடு எடுத்த தலையும், தோளை மீறி, தரைவரை தொடும் துண்டுமாக மேடையில் நின்று மு.கருணாநிதி முழங்கும் பேச்சுகளை கேட்கவே காத்திருந்த கூட்டம் உண்டு. தன்னியல்பாக வார்த்தைகளை அடுக்கி, கேட்பவர்களை வசப்படுத்தும் பேச்சாற்றல் கொண்ட மு.கருணாநிதி 14 வயதில் அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்தவர். அது முதல், 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்வரை தீவிரமாக அரசியல் களமாடிய தலைவர். கட்சியின் தலைவர் பொறுப்பில் அரை நூற்றாண்டுகாலம் நீடித்த தலைவர், என இவரைப் போல வேறு ஒருவரை இந்தியா முழுவதுமே காட்ட இயலாது.
13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். போட்டியிட்ட அத்தனைத் தேர்தல்களிலும் வென்றவர். மாநிலம் கடந்து தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் பெற்ற பெரும் ஆளுமை மு.கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை இருந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் சமூக நீதிக்கானவையாகவே பார்க்கப்படுகிறது.
மகளிருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மகளிருக்கு சொத்துரிமை, உழவர் சந்தைகள், தகவல் தொழில்நுட்பப்புரட்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார விநியோகத்துக்கான வழித்தடம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மட்டுமின்றி அவர் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களும், செயல்படுத்திய கணக்கிலா நடைமுறைகளும் தமிழ்நாட்டில் பல மாற்றங்களும், ஏற்றங்களுக்கும் வித்திட்டவை என்றால் மிகையல்ல.
2016 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தநிலையில், உடல்நிலை பாதித்து 2018 ஜூலை 27 ஆம்தேதி நள்ளிரவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதுமையால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, ஆகஸ்டு 7 ஆம்தேதி மு.கருணாநிதி காலமானார்.
ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை அவர் இறந்து போன நாளிலிருந்து கணக்கிட்டுக் கொள்ளலாம் என்றவர் மு.கருணாநிதி. இன்றும் தமிழ்நாட்டின் அரசியல் சமூக களங்களில் பயனளித்துக் கொண்டிருப்பதன் மூலம் தனது வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com