செய்தியாளர்: J.அன்பரசன்
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் உள்ள தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கடந்த வாரம் வழக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் உட்பட மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் கடந்த 18 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் 19ஆம் தேதி காலை முதல் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரும் பாண்டிச்சேரி சென்று அதன் பின்னர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியாக ஆந்திரா சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று அவர்களை தேடி வந்தனர்.
இருவரும் அங்கும் இல்லாததால் அவர்களது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதும் அதன் பிறகு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக ஆண்ட்ரோ மதிவாணனின் நண்பர்கள், மெர்லினா பெற்றோர்களிடத்தில் இரு தினங்களாக விசாரணை நடைபெற்றும் இருவர் பற்றியும் தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்களது நண்பர்கள் மற்றும் மெர்லிமாவின் அப்பா, அம்மா மொபைல் போன்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினர். அப்போது பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரோ மதிவாணனின் நண்பரான ரித்விஷ் என்பவரது செல்போனிற்கு புதிய எண்ணில் இருந்து போன்கால்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. ரித்விஷிடம், போலீசார் ஒரு நாள் முழுவதும் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆண்ட்ரோ மதிவாணன், ரித்விஷ் மூலமாக அவரது பெயரிலேயே ஒரு புதிய சிம்கார்டை வாங்கி அந்த சிம் கார்டை ஆண்ட்டோவிடம் கொடுத்ததோடு அவரது காரை வாங்கிக்கொண்டு தங்களது காரை கொடுத்ததும், கணவன் மனைவி இருவரும் ஓசூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர்.
இதனிடையே போலீசார், அவரது நண்பர் மூலமாகவே ஆண்டோ மதிவாணனுக்கு போன் பேச செய்துள்ளனர். மேலும், மெர்லினாவின் தந்தை அந்தோணி (எ) ஆண்டணியை ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வரும் தகவலையும் ஆண்ட்ரோ மதிவாணனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியுற்ற அவர்கள் தங்கி இருந்த இடத்தை விட்டு தப்பிச் செல்லாமல் அங்கேயே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓசூர் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார், தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்த இருவரையும் நேற்று நள்ளிரவு எழும்பூர் பெருநகர நீதிமன்ற மூன்றாவது அமர்வு நீதிபதி ஆனந்தன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
ஆனால், சில ஆவணங்கள் இல்லாததால் வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதி கூறிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரும் தனித்தனியாக ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை, சரிசெய்யப்பட்ட ஆவணங்களை எடுத்து வந்து நீதிபதி ஆனந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மகன் என்ற ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகிய இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.