திமுக மக்களவை குழுத் தலைவர்; கொறடா தேர்வு - தலைமைக் கழக அறிவிப்பு
மக்களவையின் திமுக குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது திமுக கூட்டணி 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற உழைத்தாதக அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் திமுகவிற்கு வெற்றியை தேடித்தந்ததாக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக வெற்றியை சிலர் திசை திருப்ப முயன்றதாகவும், மக்கள் அவர்களை புறக்கணித்ததாகவும் தீர்மானித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் மக்களவை கொறடாவாக ஆ.ராசா-வும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் நியமிக்கப்பட்டனர். இதுதவிர மாநிலங்களவைக் குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

