“இது அமலாக்கத்துறை அலுவலகமா? அல்லது சித்ரவதை கூடமா?” - திமுக வழக்கறிஞர் சரவணன் ஆவேசம்
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு 3.30 மணிக்குதான் முடிவடைந்தது.
இந்த சோதனை தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன், அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன் நள்ளிரவு 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இன்று காலை 3.30 மணிக்கு முடிந்தது. விசாரணை என்ற பெயரில் அவரது வயதையும் பொருட்படுத்தாமல் அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது.
நமக்கே இவ்வளவு சோர்வாக இருக்கு. 72 வயதான அவருக்கு எப்படி இருந்திருக்கும். அவருக்கு மன உளைச்சலை கொடுத்திருக்கிறார்கள். இதை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது.
மனித உரிமைகளை காப்பாற்ற சட்டம இருக்கிறது. ஆனால், நான் எதைப்பற்றியும் கவலைபட மாட்டேன் என்று நள்ளிரவு 3.30 மணி வரை விசாரணை செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த விசாரணையை காலையில் தொடர்ந்தால் என்னவாக போகிறது. ஸ்டேட்மென்ட் மாறிவிடப்போகிறதா? அல்லது ஆதாரங்கள் ஏதாவது அழிந்துவிடப் போகிறதா? இது அமலாக்கத்துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா என்று தெரியவில்லை” என்றார் மிகக்கடுமையாக.