சேகர்பாபு-க்கு விழுந்த பேரிடி? திமுகவின் அதிரடி முடிவு! பின்னணி என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக தோல்வியை தழுவியது, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தோல்வியை ஆராயத் தொடங்கிய திமுக, தனது உட்கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மிகவும் அதிகாரமிக்க மாவட்ட செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110-ஆக உயர்த்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், சென்னை மாவட்டம், வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு, மத்திய, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை வகித்து வந்த சேகர்பாபுவிடம் இருந்து, கொளத்தூர் தொகுதி கைமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரான பி.கே.சேகர்பாபு, கொளத்தூர், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், திருவிகா நகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை நிர்வகித்து வந்தார்.
தற்போது, திமுகவின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால், சென்னை கிழக்கு மாவட்டம் 4-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அந்த 6 சட்டமன்ற தொகுதிகளில், திருவிகா நகர், துறைமுகம், வில்லிவாக்கம் ஆகிய 3-ஐ மட்டும் தான் இனி சேகர்பாபு நிர்வகிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், கொளத்தூர், எழும்பூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளை வேறொருவர் நிர்வகிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியுற்றார். திமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான மு.க.ஸ்டாலினே தோல்வி அடைந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தோல்விக்கு, அந்த தொகுதியை நிர்வகித்து வந்த பி.கே.சேகர்பாபுவும் ஒரு காரணம் என்றும், தொகுதியில் சரியாக களப்பணியாற்றவில்லை என்றும், மிகப்பெரிய குற்றச்சாட்டை திமுக தொண்டர்கள் சிலர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கொளத்தூர் தொகுதி சேகர்பாபுவிடம் இருந்து கைமாறுவதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அடுத்ததாக அந்த தொகுதியை நிர்வகிக்கும் புதிய மாவட்ட செயலாளர் யாராக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

