கூட்டணியை இறுதிசெய்ய கெடு.. உடைகிறதா திமுக - காங்., கூட்டணி?
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கவிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும் இன்னும் எந்தக் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணியில் இணையவில்லை. ஆனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில்தான், தொடச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து, 39 தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 25 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்குக் கொடுக்க திமுக முன்வந்திருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே, ஆட்சியில் பங்கு கோரிக்கையை மறுத்துவிட்ட திமுக, தொகுதிகளை குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அதிருப்தியின் காரணமாக காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடன் தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்தான சாதக பாதகங்கள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கேட்டறிந்ததாகவும், காங்கிரசில் ஒரு சில நிர்வாகிகள் தவெகவுடன் செல்லலாம் எனவும், ஒரு சிலர் தவெகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார். அதேசமயம், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் நேற்று ஹைதராபாத் சென்றிருப்பதாகவும் அங்கு, இருவரும் தவெக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ரகசிய சந்திப்பு நடத்தலாம் எனவும் தகவல் வெளியாகவிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை பொதுவெளிகளில் வலியுறுத்தி வந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஆந்திர மாநிலத்தின் பொறுப்பாளராகவும் இருக்கும் நிலையில், தற்போது, ஹைதராபாத்தில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவரும் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துப் பேச வாய்ப்பிருக்கிறது.
ராஜ்ய சபா சீட்டு வேண்டுமா.. வேண்டாமா?
இந்த சூழலில்தான், மார்ச் 5ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் 4 மாநிலங்களவை பதவிகளுக்கான இடங்கள் காலியாவுள்ள நிலையில், இதற்கான தேர்தலில் 4 இடங்களை திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில், மார்ச் 5-ஆம் தேதிக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதால், ராஜ்ய சபா சீட் காங்கிரசுக்கு வேண்டுமா.. வேண்டாமா என கேள்வி எழுப்பியதுடன், நாளை மாலைக்குள் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும் என திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

