கடந்த 9 ஆண்டுகளைப் போல, இந்த நிதி நிலை அறிக்கையும் தீமையை விளைவிக்கும் கவர்ச்சிகரமான அறிக்கை என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கையில் ஏமாற்று வேலைகளை அறிவித்திருக்கிறார்கள். மாநில உரிமைகளில் கைவைக்கும் பட்ஜெட். பத்திரப்பதிவு மாநில அரசின் வருவாயின் கீழ் வருகிறது. மாநில வருவாயை திசை திருப்பி விடும் செயலை மத்திய அரசு செய்துள்ளது.
சாமானிய மக்களுக்கு டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தெரியாது. அரசின் எண்ணம் முழுக்க பணக்காரர்களுக்கான நலனை மேம்படுத்துவதில் தான் உள்ளது. இந்த பட்ஜெட் பாமர மக்களுக்கு, தினக்கூலித் தொழிலாளர்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. கடந்த 9 ஆண்டுகளைப் போல, இந்த நிதி நிலை அறிக்கை தீமையை விளைவிக்கும் கவர்ச்சிகரமான அறிக்கை.
வாக்குகளைப் பெற்ற பிறகு மக்களை துன்புறுத்தும் செயலை மத்திய அரசு செய்து வருகின்றது. மாநில அரசு இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். மாநிலங்களின் கூட்டமைப்பு இந்தியா என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கடுமையாக எதிர்த்ததையெல்லாம் தற்போது செய்து வருகிறார்'' என்றார்.