திமுக மாவட்ட செயலாளர் பணம் கேட்டதால் பதவியை ராஜினாமா செய்வதாக ஒன்றிய சேர்மன் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் சேர்மனாக திமுகவை சேர்ந்த செல்லம்மாள் மறைமுக தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் இன்று அவர் பதவியை உட்கட்சி பிரச்சனையால் ராஜினாமா செய்ததாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். தற்போதைய சூழலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தொடர முடியாததாகக்கூறி ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அளித்து சென்றார். இந்த சூழலில், தற்போது அவர் திமுக மாவட்ட செயலாளர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டதாக பேசும் வீடியோ வெளியானது.
இது குறித்து மாவட்ட செயலாளர் சிவ பத்மனாபனிடம் கேட்ட போது, “அவருக்கான தேர்தல் செலவு முழுவதையும் ஜெயகுமார் என்பவர் செய்தார், அவர் செலவு செய்த தொகையை திரும்ப கொடுக்க ஒன்றிய செயலாளர் கூறியதாக கூறினார். ஒன்றிய செயலாளர் குமார் என்பவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அந்த பொறுப்பை வழஙகினால் போதும், எங்களுக்கு இந்த பதவி வேண்டாம் என அவர் ராஜினாமா செய்வதாக கூறினார்” என தெரிவித்தார்.