தி.மு.க.வை தாழ்த்தப்பட்டோரின் விரோதி என சபாநாயகர் தனபால் கூறியதை, தாழ்த்தப்பட்ட மக்களே மன்னிக்க மாட்டார்கள் என்று, தி.மு.க துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சட்டமன்ற ஜனநாயகத்தில் கருப்பு நாள் ஒன்றை உருவாக்கி மரபுகளையும், நெறிமுறைகளையும் சபாநாயகர் தனபால் புதைகுழிக்கு தள்ளியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் தன்னை அவமதிக்கிறார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை தனது பதவிக்குரிய கண்ணியத்தையும் மறந்து தி.மு.க மீது சுமத்தியிருப்பதற்கு வி.பி.துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கண் முன்னே, காவலர்களால் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் தாக்கப்பட்டதையும், அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகர் தான் முழு பொறுப்பு என்றும் துரைசாமி கூறியுள்ளார். சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாவிட்டால், சபாநாயகர் பதவியிலிருந்து தனபால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.