“அண்ணா நூலகத்தில் உறுப்பினராகுங்கள்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், திமுக மாணவர் அணியினர் உறுப்பினராகி அறிவை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கான உறுப்பினர் சேர்க்கை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உறுப்பினரானார். இதைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போதைய ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நூலகத்தில் போட்டித் தேர்வு பகுதிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், இடவசதியை அதிகரிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மாணவர் அணியினர், குறிப்பாக சென்னையில் இருப்போர் உடனடியாக நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதுடன், அனைத்து மாணவர்களும் உறுப்பினராகுவதற்கான இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.