இணையதளத்திலோ சுயேட்சை வெற்றி; சான்றிதழ் கொடுத்ததோ திமுக வேட்பாளருக்கு-நீடிக்கும் குழப்பம்!

இணையதளத்திலோ சுயேட்சை வெற்றி; சான்றிதழ் கொடுத்ததோ திமுக வேட்பாளருக்கு-நீடிக்கும் குழப்பம்!
இணையதளத்திலோ சுயேட்சை வெற்றி; சான்றிதழ் கொடுத்ததோ திமுக வேட்பாளருக்கு-நீடிக்கும் குழப்பம்!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி என குறிப்பிட்டு, திமுக வேட்பாளருக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை திமுக பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, அ.வல்லாளபட்டி, பாலமேடு, பரவை உள்ளிட்ட 9 பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 552 போ் போட்டியிட்டு நடைபெற்ற தேர்தலில் பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதில், டி.கல்லுப்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அ.வல்லாளபட்டி, எழுமலை, உள்பட 6பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் டி.கல்லுப்படி பேரூராட்சியில் 10 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ராமகிகிருஷ்ணன் என்பவரின் மனைவி பழனிச்செல்வி போட்டியிட்டார். டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பு லெட்சுமி என்பவரும், சுயேட்சை வேட்பாளரான பழனிச்செல்வியும் 284 வாக்குகளை சரி சமமாக பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறிய நிலையில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்களை அங்கிருந்து வெளியேற்றி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுத்தனர்.

குலுக்கல் முறையில் சுசேட்சை வேட்பாளர் பழனிச்செல்வியின் பெயர் வந்த போதும், திமுக வேட்பாளர் சுப்பு லெட்சுமி வெற்றி பெற்றதாக முறைகேடாக சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும், குலுக்கல் முறையில் தன்னுடைய பெயர் வந்ததற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் காவல்துறையினர் பதிவு செய்த வீடியோ கேமராவில் உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் டி.கல்லுப்பட்டி 10 வது வார்டில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் என மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும், மாவட்ட நிர்வாகத்தின் பதிவுகளிலும் உள்ள நிலையில், தனக்கு வெற்றி சான்றிதழ் வழங்காமல், திமுக வேட்பாளருக்கு சாதகமாக தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டு அவரை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக புகார் தெரிவித்து பழனிச்செல்வி ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியர் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். சுயேட்சை வேட்பாளர் சுப்புலெட்சுமிக்கு ஆதரவாக அதிமுக,பாஜக வேட்பாளர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்தவற்றை விளக்கி உள்ளனர். அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்காமல் திமுக வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் கேட்ட போது, ஆர்.ஓ திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தான் சான்றிதழ் வழங்கி உள்ளார். டேட்டா என்ட்ரியில் தவறு நிகழ்ந்திருக்கலாம். இது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com