திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிற கட்சிகளின் ஆதரவும் - புறக்கணிப்பும்

திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிற கட்சிகளின் ஆதரவும் - புறக்கணிப்பும்
திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிற கட்சிகளின் ஆதரவும் - புறக்கணிப்பும்

டெல்லியிலும், தமிழகத்திலும் விவசாயிகள் போராடி வரும் சூழலில், இந்த பிரச்னைக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதாக திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்வான பின், விவசாயிகளின் பிரச்னைக்காக அனைத்துக்கட்சி‌ கூட்டத்தை கூட்டுவது இது 2ஆவது முறை. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி காவிரி விவகாரத்தை முன்வைத்து நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், திமுகவுக்கு ஆதரவாக இருந்த கட்சிகள் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தில், மக்கள்நலக் கூட்டியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்க நினைத்தும், மதிமுகவின் எதிர்ப்பால் கலந்துகொள்ளவில்லை. தற்போது மக்கள்நலக் கூட்டியகத்திலிருந்து மதிமுக பிரிந்துவிட்டசூழலில், ஞாயிறன்று நடைபெற இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. கூட்டத்தில் பங்கெடுப்பது பற்றி பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண ஆளும் அதிமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தாததாலேயே திமுக நடத்துவதாக அக்கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளுக்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி விமர்சித்துள்ளது.

கடந்த அக்டோபரில் திமுக நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்மாநில காங்கிரஸ், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால், கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, இம்முறை கலந்துகொள்ளுமா என்பதும் சந்தேகமே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com