சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதனிடையே சிகிச்சை முடிந்து பிப்ரவரி 16-ம் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில் சொன்னபடியே சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல ஆலந்தூர், காசி தியேட்டர் உள்ளிட்ட இடங்களிலும் விஜயகாந்திற்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.