நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படவில்லை என தே.மு.தி.க கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என கடந்த 26-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இடையில் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி ஜனவரி 28-ந்தேதி தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியதை போன்று, இந்தத் தேர்தலிலும் வழங்கப்பட்டால் தான் அனைத்து வேட்பாளர்களும் தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாக அமையும் என்றும் விஜயகாந்த் தமது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.