
தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.
திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்துவிட்டன. வேட்பாளர்கள் அறிவிப்பையும் முடித்துவிட்டன. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் தொகுதி அறிவிப்புக்கு அதிமுக எங்களை அழைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.