உயிரோடு இருக்கும்போதே மனைவி இறந்து விட்டதாக பேனர் வைத்த கணவர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்தவர் சேதுராம் (44). இவரது மனைவி சுகன்யா (34). இருவரும் ஆடிட்டராக உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சுகன்யா, கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 10 மாதங்களாக வசித்து வருகிறார். இதையடுத்து கணவன் மனைவி இடையே விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி நகர் ஆர்.சி. சர்ச் அருகிலும், வேறு சில இடங்களிலும் சுகன்யா இறந்து விட்டதாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுகன்யா, இது தொடர்பாக கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், முன்விரோதம் காரணமாக, தான் இறந்துவிட்டதாக கணவர் சேதுராம் பேனர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் சேதுராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.