ஜெயலலிதாவுக்கு முழுப்பாதுகாப்பு வழங்கியது திவாகரன்தான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கியது திவாகரன்தான் என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய போது அவர் இந்த கருத்தினைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெயலலிதா மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் தொண்டர்களைச் சந்திப்பது உள்ளிட்ட கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். அப்போது ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது திவாகரனும் அவரைச் சர்ந்தவர்களுமே என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
அதே போல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை உயிரோடு மீட்டுக் கொண்டு வரவும் காப்பாற்றவும் சசிகலாவின் குடும்பத்தினர் பலரும் உதவி இருக்கின்றனர் என்றும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.