கணவருடன் ஏற்பட்ட தகராறு: குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

கணவருடன் ஏற்பட்ட தகராறு: குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
கணவருடன் ஏற்பட்ட தகராறு: குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எலி பிஸ்கட் சாப்பிட்ட தாய் மற்றும் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்தவர் நித்யா (27). இவர், கோவில்பட்டிசாலையில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணியாற்றி வந்தவர். இவருக்கும் வளநாடு அருகே உள்ள வரதக்கோன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நித்யா தனது இரு குழந்தைகளுடன் தாயார் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் நித்யா கடந்த திங்கட்கிழமை தாய் வீட்டிற்கு தெரியாமல் தனது கணவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளாராம். அன்றுமுதல் மன உளைச்சலில் இருந்த நித்யா வியாழக்கிழமை தனது தம்பி ஆறுமுகத்துடன் பஞ்சாலையில் பணிபுரிந்துவிட்டு வந்தபோது, தானும் குழந்தைகளும் எலி பிஸ்கட் சாப்பிட்டுவிட்டோம் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகம், மில் நிர்வாகத்தின் உதவியுடன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்த குழந்தைகளும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மகன் ரோகித் நள்ளிரவு 2 மணியளவிலும், மகள் நல்லகண்ணு 2.30 மணியளவிலும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நித்யா தந்தை சாமிக்கண்ணு அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நித்யாவின் ஆதார் கார்டு தேவைப்பட்டதால், பஞ்சாலையில் விட்டுசென்ற நித்யாவின் கைப்பையை சோதித்தபோது அதில் நித்யாவின் மரண வாக்குமூலக் கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், தனக்கு நல்ல கணவரும் கிடைக்கவில்லை, தனது குழந்தைகளுக்கு நல்ல தந்தையும் கிடைக்கவில்லை. தனது உயிரிழப்பிற்கு தனது கணவரும், அவரது சகோதரியும் தான் காரணம். தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் கணவன் மற்றும் அவரது சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com