“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்
மாணவர்களின் எதிர்காலத்திற்காக கருத்து தெரிவிக்கும் சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” எனக் கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் எதிர்காலத்திற்காக கருத்து தெரிவிக்கும் சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில், “புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் சூர்யா உடன் நாம் துணை நிற்போம்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

