தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இதற்கிடையே, தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்தனர்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்முருதாஸ் இல்லத்திற்கு சென்ற விநியோகஸ்தர்களுக்கும், முருகதாஸின் உதவி இயக்குநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், தார்மீக ரீதியில் நீதிகேட்க சென்ற எங்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்தில் நேர்ந்த அவமானத்திற்கான எதிர்வினைதான் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தர்பார் படத்தால் நஷ்டம் என்று கூறி வரும் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். காவல்துறையிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது