சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில நாட்கள் திறந்த நிலையில் அரசு வழக்கறிஞர் அலுவலக பணியாளர் மூலமாக தொற்று பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து விசாரணை காணொலி காட்சிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 160 நாட்களுக்கு பிறகு நீதிமன்ற அறைகளில் விசாரிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை செய்யும் எனவும் தனி நீதிபதிகள் அமர்வுகள் அனைத்தும் தற்போதுள்ள காணொலி முறையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் 2 வாரம் காலையில் 3 அமர்வுகளும் மாலையில் 3 அமர்வுகளும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.