திண்டுக்கல் | நின்றிருந்த ஜேசிபி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து - இளைஞர் பலி
செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கை அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் நந்தகுமார் (26). வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த இவர், வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டில் இருந்து இடையகோட்டை செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது மோதி படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடையகோட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

