திண்டுக்கல்: இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அண்ணன் தம்பிக்கு நேர்ந்த சோகம்
செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கம்பளியம்பட்டி அருகே பொத்தகனவாய்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன்களான வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) ஆகிய இருவரும் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கம்பிளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருமலைக்கேணி சாலையில் கம்பிளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது செந்துறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த வடமதுரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.