”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீண்டாமையா? வேடிக்கை பார்க்க முடியாது” - நீதிபதிகள்

தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது- மதுரைக்கிளை நீதிபதிகள்.
மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்pt web

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நடைபெறுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பினை பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் ஶ்ரீ பகவதி அம்மன், ஶ்ரீ காளியம்மன், ஶ்ரீ முத்தாலம்மன், ஶ்ரீ மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள இந்த கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும்.

மதுரை உயர்நீதிமன்றம்
”ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது” - நிதி நிறுவனங்களுக்கு RBI அதிரடி உத்தரவு

இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை, கோயில் திருவிழாவில் பங்கேற்கவும், கழுமரம் ஏறுதல் மற்றும் படுகளம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதிப்பதில்லை. கோயில் திருவிழாவிற்கு வரியும் வாங்குவதில்லை. எங்கள் மீது தீண்டாமை வன்கொடுமை இந்த வடிவத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வேடசந்தூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதில், பங்கேற்கவில்லை. அதிகாரிகளும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். ஆகவே, மே 19ஆம் தேதி நடக்க இருக்கும் கோவில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபாட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.

”வேடசந்தூர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களோடு அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து திருவிழா கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது" என அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நடைபெறுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பினை பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது. தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஒரு மனிதன், சக மனிதனிடம் பாகுபாடு பார்பது ஏற்புடையது அல்ல” என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, "திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திருவிழாவின் போது எவ்வித சட்ட, ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பார்த்து கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com