திண்டுக்கல் பாரதிபுரம் ஐயப்பன் கோவில் அருகே வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரது மகன் சித்தார்த் (3). இந்த குழந்தை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர், பெற்றோர்கள் கண் முன்பாகவே குழந்தையின் வாயை பொத்தி தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கியுள்ளார்.
இதனைக் கண்ட குழந்தையின் தந்தை சுப்பிரமணி மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சேர்ந்து இளைஞரை துரத்திப் பிடித்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் அந்த இளைஞரின் முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார், வடமாநில இளைஞரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.