கடின பாறைகள்... குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்தது!
கடின பாறைகளால் குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட்டு வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.
இதுவரை 20 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. 100 அடிவரை முழுமையாகத் தோண்டுவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மணி நேரம் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

