“எனது மனைவியும், மகளும் என்னை தீவைத்து எரித்தனர்” - உயிரிழந்தவரின் மரண வாக்குமூலம்
நாமக்கல் அருகே தூங்கும்போது தீயிட்டு கொளுத்தப்பட்டு உயிரிழந்த கட்டட தொழிலாளி தனது மனைவி மற்றும் மகளே தனக்கு தீவைத்ததாக மரண வாக்குமூலம் அளித்தார்.
நாமக்கல் அடுத்த புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அவரது மனைவி அங்கம்மாளின் தந்தை வீட்டுக்கு மகளுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் கந்தசாமி தனது வீட்டின் வெளிப்புற பகுதியில் தனியாக கயிற்று கட்டிலில் உறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கந்தசாமியும், அவரது கட்டிலும் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து என்று எல்லோரும் கருதிய நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் கந்தசாமி மருத்துவமனையில் தனது மரண வாக்குமூலத்தை அளித்துள்ளார். தன் மீது தனது மனைவியும், மகளும் பெட்ரோல் உற்றி தீவைத்ததாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
வாக்குமூலம் அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார், கந்தசாமியின் மனைவி அங்கம்மாள் மற்றும் அவரது மகள் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.