ஈரோடு புலிகள் காப்பகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் தந்தங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தமிழக - கர்நாடக எல்லையான மூக்கன்பாளையம் நீர்த்தேக்கம் அருகே யானை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த யானை உடலைக் கண்டனர்.
அதேசமயம் அந்த யானையின் உடலிலிருந்து தந்தங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இதையடுத்து யானையின் உடல் அதே இடத்தில் கூறாய்வு செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யானை உயிரிழந்து 10 நாள்கள் ஆகியிருக்கலாம் என்பது தெரியவந்தது.
அத்துடன் அப்போதே அதன் தந்தங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கப்பதிவுச் செய்துள்ள வன மற்றும் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு மாநிலங்களின் எல்லையில் யானை இறந்து கிடந்ததால், தந்தத்தை திருடிச் சென்றவர்களை தமிழக, கர்நாடக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.