5 ஆண்டுகால ஆட்சியில் காவிரி-குண்டாறு திட்டம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வந்ததா?கே.எஸ்.அழகிரி

5 ஆண்டுகால ஆட்சியில் காவிரி-குண்டாறு திட்டம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வந்ததா?கே.எஸ்.அழகிரி
5 ஆண்டுகால ஆட்சியில் காவிரி-குண்டாறு திட்டம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வந்ததா?கே.எஸ்.அழகிரி

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு இப்போதுதான் காவிரி - குண்டாறு திட்டம் ஞாபகம் வருகிறதா? .. மதுரை எய்ம்ஸ்க்கு நாட்டிய அடிக்கலை காணவில்லை. அதுபோலதான் இதுவும் இருக்கப் போகிறது. இந்த திட்டம் தேர்தலுக்காக அறிவித்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்னிந்தியாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாதம் 1-ஆம் தேதி அவர் கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டிய வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து இன்று நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...


" பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மோடிக்கு 52 இன்ச் மார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்கக் கூடிய ஆற்றல் கிடையாது. மோடி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்னையையும் தீர்க்க இயலாத அரசாக மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது.

சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இப்போது அனைத்தும் வாபஸ் பெற்று விட்டதால் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காது. இது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடியின் இந்த அறிவிப்பை கடுமையாக கண்டிக்கிறது காங்கிரஸ். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு இப்போதுதான் காவிரி - குண்டாறு திட்டம் ஞாபகம் வருகிறதா? மதுரை எய்ம்ஸ்க்கு நாட்டிய அடிக்கலை காணவில்லை. அதுபோலதான் இதுவும் இருக்க போகிறது. இந்த திட்டம் தேர்தலுக்காக அறிவித்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இவ்வளவு நாட்கள் ஆகியும் இந்த அரசால் இரண்டாவது கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. இது அ.தி.மு.க, அரசின் தோல்விக்கான சான்று. பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்ததால் அது வெற்றி அடையவில்லை. வெற்றியடைவில்லை என்பதை மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

கமல், ரஜினி இருவரும் நண்பர்கள் அவர்கள் சந்திப்பது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போதைய அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கொண்டு வருகிறது. இதற்கு பி.எஸ்.என்.எல் ஓர் உதாரணம். பி.எஸ்.என்.எல் காலை முறித்து ஜியோவிற்கு கொடுத்துள்ளார்கள்.

தமிழக காங்கிரஸ் செயற்குழு 24 ஆம் தேதி கூடுகிறது. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை. எங்கள் அணியில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. தமிழக சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.

தென்னிந்தியாவில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. புதுச்சேரியில் கிரண்பேடியை மாற்றி விட்டார்கள். நாராயணசாமி அரசு கவிழாது. இந்த முயற்சியில் பா.ஜ.கவிற்கு தோல்வியே ஏற்படும்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com