டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது சரியே என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்ட, ஏ.ஐ.டி.யு.சி., செயலர் கதிரேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை, 'குட்கா' உற்பத்தி நிறுவனங்களிடம் 2016ல் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவற்றில், மாநில அமைச்சர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இருந்தன. இவ்விவகாரம் தொடர்பாக, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, டி.கே.ராஜேந்திரன் மீதும் புகார் எழுந்துள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் பதவி நீட்டிப்பு உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்த கதிரேசன், 'குட்கா' வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் உள்ள புகாரை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சார்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு சரியே என்றும் புகார் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் குட்கா விவகாரம் தொடர்பாக குழு அமைத்து எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.