தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
சரஸ்வதி பூஜையை ஒட்டி திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கலை தெய்வமான சரஸ்வதியை வழிபட்டால் கல்வி ஞானம், கலைஞானம் பெருகும் என்பது ஐதீகம்.
இதைத்தொடர்ந்து இன்று சரஸ்வதி பூஜை நடைபெறும் நிலையில், திருவாரூர் அருகே உள்ள கூத்தனூரில் ஒட்டக்கூத்தரால் வழிபாடு செய்யப்பட்ட பழமை வாய்ந்த சரஸ்வதி அம்மன் கோயிலில், சரஸ்வதி பூஜையை ஒட்டி இன்று காலை சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சரஸ்வதி அம்மனின் பாத தரிசனம் நடைபெற்றது. அம்மனுக்கு வெண்பட்டு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சரஸ்வதி பூஜையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூத்தனூர் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கல்வி ஞானம் பெருக வேண்டும் என்பதற்காக பக்தர்கள் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.