\
Car festival
Car festivalpt desk

தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம்: சிவ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
Published on

தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றுவருகிறது. சித்திரை விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

Devotees
Devoteespt desk

இதையடுத்து சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'திருத்தேரோட்டம்' இன்று காலை துவங்கியது. பெரிய கோயிலின் அருகில் உள்ள மேல வீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், தியாகராஜ சுவாமி- அம்மனுடன் எழுந்தருளிய நிலையில், சிறப்பு பூஜைகள் செய்த பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தாரை தப்பட்டை முழங்க நாதஸ்வர இசையுடன் பல்லாயிரக் கணக்கான சிவ பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மேல வீதியில் துவங்கிய திருத்தேர் கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி ரத்தினபுரீஸ்வரர் கோயில், கீழராஜ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மேல வீதியில் நிலைக்கு செல்லவுள்ளது.

Car festival
Car festivalpt desk

இந்நிகழ்ச்சியை காண திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறை வாகனங்கள் தேர் பின் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக வந்துகொண்டிருந்தன. கோடை காலம் என்பதால் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் சார்பில் தண்ணீர், மோர் வழங்கியதோடு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com