சென்னையில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் இடம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்!
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலக வளாகம் சென்னை, பட்டினப்பாக்கம் அருகிலுள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) மற்றும் சென்னை மாநகராட்சி (GCC) ஆகியவை சுமார் 25.16 ஏக்கர் நிலத்தை அரசு பயன்படுத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கியுள்ளன. இதன் காரணமாக விரைவில் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது வெளியான தகவலின்படி, புதிய தலைமைச் செயலகம் 15 மாடிகளுடன், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு செலவு 1,200 கோடி எனவும், அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சுமார் 2,047 கோடி எனவும் கூறப்படுகிறது. அரசு தலைமை செயலகம் அமைக்க முதலில் ஃபோர்ஷோர் எஸ்டேட், கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டி ஆகிய மூன்று இடங்களை பரிசீலித்த நிலையில், சுமார் 25 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதால் ஃபோர்ஷோர் எஸ்டேட் இறுதியாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலம் 1958-ஆம் ஆண்டு வீட்டு வசதி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு, பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. அவை பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு, தற்போது அந்த இடம் காலியாக உள்ளது. இதோடு, வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களையும் இணைத்தால், புதிய தலைமைச் செயலக வளாகத்தின் மொத்த பரப்பளவு 26.5 ஏக்கராக இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

