மகளின் திருமண கடனால் மன உளைச்சல் - பால் வியாபாரி மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி அருகே மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், பால் வியாபாரி தனது மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக ஐந்து லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். பால் வியாபாரியான மணி வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு நெருக்கடி செய்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணியின் வீட்டை பூட்டி கடனை வசூலிக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கேட்டு மணி தனது வீட்டின் சாவியை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நீண்டநேரமாகியும் மணியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது மணி மற்றும் அவரது மனைவி கண்மணி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான மணி மற்றும் அவரது மனைவி கண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் கொடுத்தவர்களில் நெருக்கடி காரணமாகவே இருவரும் தற்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.