டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். வைரஸ் மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு 10 பேர் உயிரிழக்க நேரிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இதேபோன்று பழவேற்காடு வைரவன்குப்பத்தை சேர்ந்த நாகலிங்கம் என்ற மீனவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியை சேர்ந்த நளினியும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் காய்ச்சலால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 162 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையில் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் 4 வயது மகன் கவினேஷும் காய்ச்சலால் உயிரிழந்தான்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த புரிசையில் பார்வதி என்ற பெண் ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். நாகை மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 200க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு அறிகுறியுடன் 10க்கும் அதிகமானோர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் வைரஸ் உள்ளிட்ட மற்ற காய்ச்சல் பாதிப்புக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.