கோவையில் வேகமாக பரவும் டெங்கு: காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 30-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 13 குழந்தைகள் 18 பெரியவர்கள் என 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.