டெங்கு காய்ச்சல் முதலில் உருவான நாடு எது தெரியுமா?
தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு நோய் முதன் முதலில் எங்கு தோன்றியது. அது எப்போது கண்டறியப்பட்டது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சீனாவின் மருத்துவ என்சைக்ளோபீடியாவில் 265-420 ஆம் ஆண்டுகளில், தற்போதைய டெங்கு அறிகுறியுடன் அந்நாட்டில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. அதன் பின் டெங்கு என பெயரிடப்படாத காலத்தில், 1635-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளிலும் இந்த காய்ச்சல் பரவி பாதிப்பை ஏற்படுத்தியதற்கான தகவல்கள் உள்ளன.
1779, 80-களில் ஆசியா, வட அமெரிக்கா, ஆப்பிரிகா உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் டெங்கு பாதிப்புகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நோயால் ஏற்படும் பாதிப்புகளால் முதன் முதலில், 'எலும்பு முறிவு காய்ச்சல்' என 1789-ஆம் ஆண்டு பெஞ்சமின் ரஸ் என்பவர் இதற்கு பெயரிட்டார். அதன் பின் கிழக்கு ஆப்பிரிக்காவில் இதன் பாதிப்பு அதிகரித்து, பல இழப்புகளை ஏற்படுத்தியதால் அந்த மக்கள் துர் ஆவியால் திடீரென உண்டாகும் நோய் என பொருள் படக்கூடிய வகையில் 'கி டெங்கா பெபோ' என்ற பெயரை வைத்து முதன் முதலில் இந்த நோயை அடையாளப்படுத்தினர்.
அதன்பின், 1827 - 28 கால கட்டங்களில் கரிபியாவில் பாதிப்பு ஏற்படுத்திய இந்த காய்ச்சலை டெங்கு அல்லது டெங்கி என மக்கள் அழைக்கத் தொடங்கியதாக குறிப்புகள் கூறுகின்றன. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1906-ஆம் ஆண்டு ஏடிஸ் எனப்படும் கொசுவால் டெங்கு உருவாகிறது என்பது கண்டறியப்பட்டது. வடக்கு அர்ஜெண்டீனா, வடக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், பொலிவியா, பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கியூபா, கெளதமாலா, இலங்கை, இந்தோனேசியா, இந்தியா போன்ற வறண்ட, உலர் வெப்ப நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ளன.