டெங்கு குறித்த விழிப்புணர்வு தொடர் நேரலையில் புதிய தலைமுறை
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், “விழிப்புடன் இருப்போம்.. டெங்குவை ஒழிப்போம்” என்கிற நோக்கில் புதிய தலைமுறை இன்றைய நாள் முழுவதும் தொடர்நேரலையாக டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியமாய் இருந்த பலரின் உயிரை பறித்து தமிழகமெங்கும் உயிர் பயத்தை காட்டி நிற்கிறது டெங்கு காய்ச்சல். ரத்தம் குடிக்கும் கொசு, டெங்குவாக மாறி உயிரையும் சேர்த்துக் குடிப்பது மக்கள் யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
நன்நீரில் வளரும் ஏடிஎஸ் ஈஜிப்ட் என்ற வகை கொசுவே டெங்கு பரவ முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில் சுற்றுப்புற சுகாதாரம் பற்றிய கேள்வியையும் எழுப்பியிருக்கிறது டெங்கு. அந்த கொடிய காய்ச்சலை ஒழிக்க நிலவேம்பு கசாயத்தில் தொடங்கி அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
காய்ச்சலின் ஆரம்ப நிலையில் அரசு மருத்துவமனையை நாடினால் டெங்குவை அடித்து விரட்டிவிடலாம் என மருத்துவர்கள் கூறும் போதிலும் அதன் தாக்கம் குறைந்தபாடியில்லை. மக்களிடம் டெங்குவை பற்றிய முழு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அறவே ஒழிக்கும் முயற்சியை உங்கள் புதிய தலைமுறையும் கையில் எடுத்திருக்கிறது.
டெங்குவை தடுப்பது எப்படி? வந்தால் தப்புவது எப்படி? எடுத்துக்கொள்ளவேண்டிய சிசிக்கைகள் என்ன? என்பது போன்றவை குறித்து இன்றைய நாள் முழுவதும் தொடர் நேரலையில் பதிவு செய்து வருகிறது புதிய தலைமுறை. இதுமட்டுமின்றி இந்த செய்திகள் #LetsFightDengue ஹேஷ்டேக்கிலும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. பொதுமக்களும் புதிய தலைமுறையின் #LetsFightDengue என்கிற ஹேஷ்டேக்கில் தங்களது டெங்கு குறித்த கருத்துகளை பதிவு செய்வதால் #LetsFightDengue ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

