”தண்ணீர் வரல; வயலெல்லாம் வெடிச்சி கெடக்கு”.. வாடிய பயிரை கண்டு கண்ணீர் வடிக்கும் டெல்டா விவசாயிகள்!
தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை இரண்டு லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயித்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் அளவிலான பயிர்கள்தான் தண்ணீரின்றி காய்ந்திருக்கின்றன.
நட்டு 15 முதல் 20 நாட்களான பயிர்களை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். முறை வைக்காமல் தண்ணீர் விட்டால் மட்டுமே பயிர்களை காக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி பரப்பாகரம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதை தெளிப்பு மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நேரத்தில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கின. இதனால் மனவேதனை அடைந்த செல்வம் என்ற விவசாயி தனது வயலை டிராக்டர் மூலம் உழுது அழித்தார்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் பெயது வரும் மழையால், கர்நாடகத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.