சீனாவிற்கு எதிரான போர் பயிற்சியா? - நிர்மலா சீதாராமன் பதில்!
ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியா முன்னேறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் பாதுகாப்புத்துறையின் பிரம்மாண்டமான ராணுவக் கண்காட்சி தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். 800 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணி வெடிகளை அகற்றும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 47 நாடுகள் பங்கேற்றுள்ளன. கண்காட்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் உள்ளதாகவும், அதனை உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் எல்லையில் சீனாவிற்கு எதிராக போர் பயிற்சி நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.