“தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகள்”-நீதிமன்றம் அறிவிப்பு

“தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகள்”-நீதிமன்றம் அறிவிப்பு
“தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகள்”-நீதிமன்றம் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

அதன் விவரங்கள் :

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக்கை இரண்டாம் நிலை சட்டப்பூர்வம் வாரிசுகளாக அறிவிக்கிறோம். ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஒதுக்கி, அவர் பெயரில் பொதுச் சேவைக்காக அறக்கட்டளை ஒன்றை தீபாவும், தீபக்கும் அமைக்க வேண்டும். அது சம்பந்தமாக எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி மற்றும் ஜானகி ராமன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்கிறோம். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு கையகப்படுத்தும் போது, அதற்கான இழப்பீட்டை நிர்ணயித்து, அதை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தி, அதற்குப் பெருந்தொகையை இழப்பீடாக வழங்குவதற்குப் பதிலாக, அத்தொகையைக் குடிநீர் திட்டத்துக்கும், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறோம். மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதே, கட்சித் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும். மறைந்த முதல்வர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்ற அரசுகள் முடிவெடுத்தால், அது ஒரு தொடர்கதையாகவே இருக்கும். அரசு பணம் தேவையில்லாமல் நினைவு இல்லங்கள் அமைக்கவே செலவிடப்படும்.

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். போயஸ் தோட்ட இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதற்குப் பதில், ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மீதமுள்ள பகுதிகளை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கும், தீபக்குக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒன்றை விற்று, அத்தொகையை வங்கியில் வைப்புத்தொகை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இருவரின் பாதுகாப்பு செலவினங்களுக்குத் தீபா, தீபக் பயன்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com