தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் உயிரிழப்பு: வாழப்பாடியில் சோகம்
வாழப்பாடி அருகே தந்தை இறந்த சோகத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமாது (60). கூலித் தொழிலாளியான இவருக்கு லோகாம்பாள் என்ற மகளும் வெங்கடேஷ், மணி என்ற மகன்களும் உள்ளனர். மகள் லோகம்பாளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர் தனது கணவர் சீனிவாசன் மற்றும் மகன் ஆகியோருடன் தந்தை மீது உள்ள பாசத்தால் அதே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சின்னமாது உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக அவதியுற்ற நிலையில், திடீரென உயிரிழந்தார். இதனையறிந்து வந்த லோகாம்பாள் தந்தையின் சடலத்தின் மீது சாய்ந்தபடி கதறி அழுதார். பின்னர், தந்தை மீது சாய்ந்திருந்த அவரை எழுப்ப முயன்ற போது லோகாம்பாள் உயிரிழந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரது சடலங்களை அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை மட்டுமல்லாமல் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.