ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நால்வர் செய்த மேல்முறையீட்டு வழக்கில், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுக சார்பில் க.அன்பழகனும், பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமியும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு காலதாமதம் ஆவதாக கூறினார். அப்போது பதிலளித்த நீதிபதிகள், ஒரு வாரத்திற்கு பொறுத்திருக்குமாறு தெரிவித்தனர். இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.