மிக்ஜாம் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக மாலை 5 மணி நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 8,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படியும் மழை விடாமல் கொட்டி வருகிறது. சென்னையில் நல்ளிரவு முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மிக்ஜ்ம் புயல் நெல்லூர் பகுதியை கடந்த பிறகே சென்னையில் மழை குறையும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 22.41 அடியாக உள்ளது. அரை மணி நேரத்திற்கு 1,000 கன அடி வீதம் 8,000 கன அடி வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆறுகளை ஒட்டிய கரையோர பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
புயல் கரையைக் கடக்கும் போது சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மரங்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் செல்வதால் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.