Cyclone Ditwah
Cyclone Ditwahx page

Cyclone Ditwah : சென்னைக்கு தெற்கே 290 கிலோ மீட்டர்.. 2 மாவட்டங்களுக்கு Red Alert

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% அதிகமாக பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு

டிட்வா புயல் பாதிப்பால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மின் கம்பங்கள் புயலில் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 35% பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் தொடர்வதால் மின் கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் தகவல் தொடர்புக்கான கண்ணாடி ஒளியிழை குழாய்கள் சேதமடைந்துள்ளதால் தொலைத்தொடர்பும் முடங்கியுள்ளது. பல இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது

இலங்கை வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆனது...

இலங்கை வெள்ளம்
இலங்கை வெள்ளம்pt web

இலங்கையில் டிட்வா (DITWAH) புயல் ஏற்படுத்திய பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 123 ஆக உயர்ந்துள்ளன. இந்நிலையில், கண்டியில் மட்டும் 50 பேருக்கு மேல் இறந்துவிட்டதாகவும் ஒட்டுமொத்த உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அப்பகுதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள 2 பெரிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அணைகள் முழுக்கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பகுதிகளில் சிக்கியவர்களை முப்படையினரும் காவல் துறையினரும் இணைந்து மீட்டு வருகின்றனர்.

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

எங்கே இருக்கிறது டிட்வா புயல்? சென்னையில் கனமழை எப்போது?

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% அதிகம்

அமுதா
அமுதாpt web

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியகரையில் 25 செமீ, வேதாரண்யத்தில் 19 செமீ, வேளாங்கண்ணியில் 13 செமீ, திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இயல்பைவிட 3 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையத் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து  330 கி.மீ தொலைவில் டிட்வா புயல்...

டிட்வா புயல்
டிட்வா புயல்pt wen

சென்னைக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது டிட்வா புயல். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மழை
மழைpt web

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் கன மழையால் 9,000 ஏக்கர் உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.!

நீரில் மூழ்கியுள்ள உப்பளங்கள்
நீரில் மூழ்கியுள்ள உப்பளங்கள்pt web

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல், கோடிக்கரை ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும், இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர். இந்த உப்பு உற்பத்தியில் நேரடியாகவும். மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில்  உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பளம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால், இந்த தொழிலில்  ஈடுபட்டு வந்த சுமார் 5 ஆயிரம் தொழிலாளர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 

மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடலோர‌ மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்து பலத்த மழை பெய்து வந்தது.

இதில்  தரங்கம்பாடியில் 11.11 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தரங்கம்பாடியில் தாழ்வாக உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று சிகிச்சை பெறவந்த வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் அவதியடைந்தனர். இந்த மழைநீர் வடிய இரண்டு நாட்கள் ஆகும் எனவும் கூறுகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் வடிகாலை சீரமைத்து மழை நீரை அகற்றி வருங்காலங்களில் மழை நீர் தேங்காதவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க வேண்டும், வடிகால்களை தூர்வாரி நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என‌ அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதே நிலை நீடித்து வருவதாக கவலை தெரிவித்தனர்.

இலங்கை 'டிட்வா' புயல்: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு; 191 பேர் காணாமல் போயுள்ளனர்!

இலங்கையைத் தாக்கிய கடுமையான வானிலை நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்களை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பேரிடர் மரண எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடும் வானிலை காரணமாக இதுவரை 191 பேர் காணாமல் போயுள்ளனர். 'டிட்வா' புயல் விலகிச் சென்ற போதிலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மிக கன மழை எச்சரிக்கையால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மையங்களில் மக்கள்.. ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மாவட்ட ஆட்சியர் அருணா பார்வையிட்டு குறைகளை கேட்டு அறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதி கிராமங்களான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், அம்மாபட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டைப்பட்டினம் ராம்நகர் மீனவர் காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டு அறிந்ததோடு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கு முன்பாக அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நம் மக்களிடம் ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com