”அமேசானிலிருந்து கிஃப்ட் கார்டு வந்தால் ஏமாந்துவிடாதீர்கள்” - மக்களை எச்சரித்த சைபர் கிரைம் போலீஸ்!

அமேசான் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போல் கிப்ட் கார்டு அனுப்பி பண மோசடி செய்யும் குற்ற செயல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
cyber crime
cyber crimeRepresentational Image

சைபர் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்ற வகையினை மாற்றிக்கொண்டு புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். தற்பொழுது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி டிரா பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் ஒரு கடிதம் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வெற்றியாளர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் என்று ஸ்மார்ட் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கடிதத்துடன் ஒரு ஸ்க்ராட்ச் கூப்பன் சேர்க்கப்பட்டிருக்கும்.

கூப்பனை ஸ்க்ராட்ச் செய்து அதில் உள்ள குறியீட்டு கோட்டை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நம்பி தொடர்பு கொள்ளும் போது குற்றவாளிகள் விலை மதிப்புள்ள பரிசுகள் பொது மக்களின் பெயரில் விழுந்திருப்பதாக கூறுவர்.

அந்தப் பரிசு அல்லது ரொக்கத்தை பெறுவதற்கு IGST, CGST, SGST போன்ற வரிகளை கட்ட வேண்டும் என்று கூறி பணம் அனுப்பச் சொல்வார்கள். அதை அனுப்பும் பட்சத்தில் மேலும் பணம் சுரண்ட, சேவை வரி, வருமான வரி என்று கூறி பணம் அனுப்பச் சொல்லி ஏமாற்றுவர். ஆனால் பரிசோ, பணமோ பொது மக்களுக்கு வந்து சேராது.

எனவே பொது மக்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து பரிசு விழுந்திருப்பதாக கடிதமோ, இ-மெயில் வந்தாலோ, போன் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு யாரேனும் பேசினாலோ அதை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற மோசடி செயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com