ஊஞ்சல் உற்சவம்pt desk
தமிழ்நாடு
கடலூர் | ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம் - திரளான பக்தர்கள் தரிசனம்
புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெற்றது இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அங்காளம்மன் சிவசக்தி ரூபம் கொண்டு சிவலிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்யும் அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார்.
இதையடுத்து பம்பை ஒலி முழங்க தாலாட்டு பாடலுடன் ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.